சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா மீண்டும் திரைப்படம் ஒன்றை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
‘3’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தனுஷ். இதைத் தொடர்ந்து ‘வை ராஜா வை’ என்ற படத்தை இயக்கிய இவர், ‘சினிமா வீரன்’ என்ற பெயரில் திரைப்படத்துறையில் பணியாற்றும் சண்டைப்பயிற்சி கலைஞர்கள் பற்றிய ஆவண படம் ஒன்றையும் இயக்கியிருக்கிறார்.
சிறிய இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் தமிழ், தெலுங்கில் தயாராகும் திரைப்படத்தை இயக்குகிறார். தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமாக திகழும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகவிருக்கும் இப்படத்தின் கதையை சஞ்சீவ் எழுதியிருக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாக் காலகட்டத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா தனுஷ் மீண்டும் திரைப்படத்தை இயக்குவதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இதனிடையே ஐஸ்வர்யா தனுஷ் இயக்கவிருக்கும் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும், இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தயாரிக்கிறார் என்றும், இதனை லைகா நிறுவனம் வெளியிடுகிறது என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வேறு சிலர், இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் பாராலிம்பிக் நாயகன் மாரியப்பன் பற்றிய சுயசரிதை திரைப்படமாக தயாராகிறது என்ற அறிவிப்பு வெளியானது. அந்தப் படம் கிடப்பில் போடப்பட்டதா..! அல்லது அதன் இயக்குநர் பொறுப்பிலிருந்து ஐஸ்வர்யா தனுஷ் விலகி விட்டாரா..! என்பது உறுதியாக தெரியவில்லை என்கிறார்கள்.
இருப்பினும் சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்பட இயக்கத்திற்கு திரும்பியிருக்கும் ஐஸ்வர்யா தனுசை திரை உலகினர் வரவேற்கிறார்கள்.