‘வல்லான் வகுத்ததே நீதி; எளியோருக்கு இங்கு அநீதி’ என்ற இந்த காலகட்டத்தில் நீதியை உரக்கச் சொல்ல வரும் திரைப்படம் தான் ‘அநீதி’.
நீதி கிடைக்காதவர்களின் குரலாக இந்த ‘அநீதி’ ஒலிக்கும்’ என திரைப்பட இயக்குநரும், தேசிய விருது பெற்ற படைப்பை உருவாக்கிய படைப்பாளியுமான வசந்த பாலன் தெரிவித்திருக்கிறார்.
அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகி இருக்கும் படைப்பு ‘அநீதி’. வசந்த பாலன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்கரவர்த்தி, பரணி, காளி வெங்கட், அர்ஜுன் சிதம்பரம், சுப்பிரமணிய சிவா, தயாரிப்பாளரும், நடிகருமான ஜே. சதீஷ்குமார், தயாரிப்பாளரும், நடிகருமான டி சிவா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பிரம்மாண்ட இயக்குநர் சங்கரின் எஸ் .பிக்சர்ஸ் வழங்குகிறது.
ஜூலை 21ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதற்கு முன்னர் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.
அதன் போது இயக்குநரும், தயாரிப்பாளருமான வசந்த பாலன் பேசுகையில், ” நீதி கிடைக்காதவர்கள் குரலாக இப்படம் ஒவிக்கும். எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை இப்படம் பிரதிபலிக்கும். மொத்த உலகமும் அன்பை எதிர்பார்த்து தான் சுழல்கிறது. அதனை இப்படத்தின் மூலம் சொல்ல முயற்சித்துள்ளோம். அர்ஜுன் தாஸ், பொலிவுட் நடிகர் ஷாருக்கான் போன்று வருவார் என இங்கு கூறினார்கள். உண்மையிலேயே அவருக்கு அதற்கான திறமை இருக்கிறது. இந்த படைப்பை எந்தவித சமரசமில்லாமல் உருவாக்கி இருக்கிறோம். அனைத்து தரப்பினருக்கும் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.
இந்த ‘அநீதி’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இம்மாதம் 21 ஆம் திகதியன்று வெளியாகிறது.