கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பிரசவம் ஆகும் வரை தன் உடல் நிலையையும், வயிற்றில் வளரும் குழந்தையையும் கவனமாக பார்த்துக்கொள்வது முதல் கடமையாகும்.
அதேபோல குழந்தை பிறந்த பின்னர் அதற்கு தாய்ப்பால் கொடுப்பதற்கும், குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்கும், தன்னுடைய பச்சை உடம்பு வலுப்பெறுவதற்கும், தன்னை முன்னை விட நன்றாக கவனித்துக்கொள்வது மிக மிக முக்கியம்.
இதற்கு சத்தான உணவுகள் மட்டும் போதாது. மருத்துவருடைய ஆலோசனையின்படி உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். ஒரு தாய் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் அவள் குடும்பமும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
அதிலும், குறிப்பாக பிரசவமான பெண்கள் உடலின் உள் ஆரோக்கியத்தை மட்டும் பார்க்காமல், வெளி ஆரோக்கியத்தையும் உடற்பயிற்சி மூலம் உடல் அமைப்பையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் தாம்பத்தியமும் தடுமாறாமல் செல்லும்.
என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்?
- சுகப்பிரசவம் எனில், சில வாரங்களிலேயே வயிற்றுத் தசைகள், இடுப்புத் தசைகள் சுருங்கப் பயிற்சிகள் செய்ய வேண்டும். தற்பொழுது அந்தப் பயிற்சிகளை செய்தால்தான் 50, 60 வயதுகளில் கூட பிறப்புறுப்பின் ‘தசைகள்’ வலுவாக இருக்கும்.
- உடற்பயிற்சிகள் செய்தால்தான் ஹெர்னியா, கர்ப்பப்பை சரிதல் போன்ற பிரச்சினைகளை தடுக்க முடியும்.
- அறுவை சிகிச்சை பிரசவம் எனில், 2 மாதங்களுக்கு பின்னர்தான் உடல் சாதாரண நிலைக்கு வரும். அதற்குப் பின் உடற்பயிற்சிகள் செய்யலாம்.
நன்றி | வீரகேசரி