சொந்தக் கருத்தினைச்
சொல்லத் தயங்கும்
மந்தைச் சமூகத்தில்
மானுடம் பற்றிய
எந்தக் கருத்தும்
எடுபட மாட்டாது!
வந்ததை வாங்கி
வையப் பொதுவெளி
மன்றினிற் பதிவேற்றம்
செய்து மகிழ்வதும்.,,
கும்பிடு போடும்
குறியீட்டின் வழியே
கூற்றினை ஏற்பதாய்
அறைகூவி நிற்பதும்…
கொந்திய கனிகளைக்
கூடையிற் சுமந்து
கூவிக் கூவி்
விற்று நெகிழ்வதும்…
சந்ததி சந்ததி
சந்ததி வழியாய்ச்
சாதித்த சமூகச்
சாக்கடை விதிகளைத்
தம்வழி பிறந்த
சந்ததியினர்க்கும்
சந்ததிச் சொத்தெனத்
தந்து புகழ்வதும்…
இன்றைய எங்கள்
இனத்தின் பண்பாடாய்
இருப்பது கண்டு
இதயம் வலித்தது!
செந்தமிழென்றும்
செம்மொழியென்றும்
முந்தையர் மொழிந்த
முதல்மொழியென்றும்
வந்தனை செய்திடல்
வரலாறு தன்னை
எந்த அளவிற்கு
இழுத்துச் செல்லுமோ?
என்பதை யறியாது
சிந்தை கலங்குதே!
பறையா மொழியாய்
பகரா் மொழியாய்
பனுவல் வழியே
பதியா மொழியாய்…
உரையாய்க் கவியாய்
உணர்வின் களமாய்
மறையாய் அறமாய்
மலரா மொழியாய்..
எழுதா மொழியாய்
இணையா மொழியாய்
எம்தாய் மொழிதான்
வீழ்தல் தகுமோ?
ஒருநால்வரியில்
உணர்வைப் பொழியும்
சிலபேரேனும்
அவையில் உளரோ?
திருவாய் மலர்ந்தென்
செவிதான் குளிர
அறைவாய்! அம்மா!
உமை நாயகியே!
புலவர் சிவநாதன்