ஆண்டவரே…!
நீர் கொல்லப்பட்டு,
உயிர்த்தெழுந்தபோது…
நாம் கொல்லப்பட்டோம்!
ஒரு செம்மறி ஆட்டைப் போல,
எம்மைக் கொன்றார்கள்!
பறந்த எமது குருதி..
அப்பி வடிவதற்கும்
சிதறித் தெறிப்பதற்கும்
அங்கே….
உமது சுவர்கள் இருக்கவில்லை!
களவாடப்பட்ட
பாசி மணிகளைப் போல,
எங்கள் மன்றாட்டுகளும்
காணாமல் போயின!
நீர் இருக்கும் ஓர் பொழுதில்…
அங்கு
என்னதான் நடந்திருக்கும்?
எதுவும்…
உம் திருநாமத்தால் என்றால்;
உமக்குத் தெரியாமலா
வெடித்திருக்கும்…
ஆண்டவரே!
உமக்கே தெரியாமலா
நாமும் இறந்திருப்போம்…
ஆண்டவரே…!
‘எமது ரத்தத்தை ஏற்று,
எவர்தான்…
அரியணையும் ஏறி,
கிரீடமும் சூட,
அவாவினரோ!?’
சொல்லும் என் ஆண்டவரே
என்றேன்!
கேட்டதோ
ஊழிச் சுவிஷேசம்!
‘இதோ
போர்களின் நாயகனாய் நான்!
ஒரு துப்பாக்கியில்…
ஓராயிரம் சன்னங்களை
ஆகப்பண்ணி,
சாவுப் புத்தகத்தின் சாட்சியாய்
உள்ளவனுமாய் உள்ளேன்!’