போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட தனது கணவரை விடுவிப்பதற்கு களுத்துறை தெற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரியொருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது கணவர் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் களுத்துறை தெற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த கணவர் தனது மனைவியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு அணிவதற்கு ஆடையொன்றை எடுத்து வருமாறு கூறியுள்ளார்.
பின்னர் , இந்தப் பெண் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ள நிலையில் தனது கணவரை விடுவிப்பதற்காக களுத்துறை தெற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரியொருவருக்கு 3 இலட்சம் ரூபா இலஞ்சம் கொடுக்க முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.