இனிமை பயக்கப் பேசிடுவோம்
இயலும் வரைக்கும் உதவிடுவோம்
பகைமை மறக்க முயன்றிடுவோம்
பலரும் விரும்பப் பழகிடுவோம்
நினைவில் நல்லதைத் தேக்கிடுவோம்
நெஞ்சைப் பளிங்காய் ஆக்கிடுவோம்
வழியைத் தேர்ந்து நடந்திடுவோம்
வாழ்வில் நிறைவைக் கண்டிடுவோம் !
குறைகள் பேசா இருந்திடுவோம்
குன்றில் விளக்காய் ஒளிவிடுவோம்
கறைகள் களைய முயன்றிடுவோம்
கண்ணியம் காண விழைந்திடுவோம்
தலையில் கனதி குறைத்திடுவோம்
தடைகள் வந்தால் தகர்த்திடுவோம்
நிலையில் உறுதி கொண்டிடுவோம்
நிம்மதி வாழ்வில் நிறைத்திடுவோம் !
கனவில் நல்லதைக் கண்டிடுவோம்
கருத்தில் தூய்மை இருத்திடுவோம்
கருணை கண்களில் நிறைத்திடுவோம்
கயமை கண்டால் கடிந்திடுவோம்
அன்பை வாழ்வில் அணைத்திடுவோம்
ஆத்திரம் என்பதை அகற்றிடுவோம்
என்றும் வாழ்த்தை வழங்கிடுவோம்
இரக்கம் துணையாய் ஆக்கிடுவோம் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா – மெல்பேண் … அவுஸ்திரேலியா