எதிர்வரும் ஜூலை 16ம் திகதி இலண்டனில் நடைபெற உள்ள கிளி மக்கள் அமைப்பின் ஒன்றுகூடலில் மண்ணின் மைந்தன் விருதைப்பெற இருக்கின்றார் கல்வியாளர் எட்வெர்ட் மரியதாஸ் ஆசிரியர். அதனைச் சிறப்பிக்கும் முகமாக அவரது பழைய மாணவி செலுத்திய கவிதை.
கிளிநொச்சியை அறிவால் – பல
உச்சிகள் தொட வைத்த போதகனே
சில பட்சிகள் போல் கட்டுண்ட மாணவத்தை
கழுகாக்கிய காவலனே
கணிதம் எனும் பெரும் பாடத்தை
புனிதமாக்கி
ஊட்டிய தாய்மையனே
கற்றவர் சபையெங்கும் – நம்
மாணவர் புகழாக
பெற்றவர் போல் ஆளாக்கிய
காவியனே………!
மனிதம் போற்றும் கல்வியிலே– அன்று
கணிதம் கற்பது மட்டுமே இடையூறு
மாணவர்கள் கண் திறக்க நீ திறந்த கணிதப் பேராறு…
உன்னிடம் கற்க வந்த அத்தனை பேரும்
உயர் சித்தி பெற்றார்கள் – இன்று
உலகிற்கே புத்தி சொல்லும் சக்தி பெற்றார்கள்
கத்தி கத்தி புத்தி கிழித்து
கணிதத்தை நீ ஊட்டினாய்- இன்று
பக்தி மார்க்க காவலர் போல் பலர்
புகழ் ஈட்டினார்…
எல்லா மரங்களிலும் அதிக கிளை இருப்பது போல்
எல்லா பகுதியிலும் கணித விதை விதைத்து
அறிவு தோப்பை உருவாக்கினாய்
பல வறியவர்கள் கற்று தேறவும் – சில
வசதிகளை எமக்காக்கினாய்
நீ செய்த தியாகங்கள் உலகெல்லாம் விளக்காக
உம் புகழை பாடுவதே
நமக்கெல்லாம் இனிப்பாக…
வன்னி மண்ணே கொண்டாடும்
வரலாற்று புகழ் உனதாகும்
கணித கண்ணைத் திறந்த – ஞானம் உம்மைத் தவிர எவராகும்
பல கணித மேதைகளை உருவாக்கிய சாதனை
உமது தரமாகும்
உமை வாழ்த்த கிடைத்ததே -நாம்
பெற்ற வரமாகும்…
எல்லாம் கற்ற பிள்ளையும்
கணிதம் முள்ளாய் குத்த அழுததே
முல்லை பூவாய் உங்களால் கணிதம் பூக்க
முல்லைத் தீவு வரை புனிதம் பூத்ததே…
உயர் கல்வியை பலர் தொட
கல்வித் தோள் தந்த தாசரே
பல உள்ளங்கள் மேம்பட சிலுவை சுமந்தயேசு நாதரே
பள்ளத்தில் வீழ்ந்திடாது பல பாதை காட்டிய ஈசரே
உமை வாழ்த்தி மகிழ்கிறோம்
வாழ்க பல காலம் எம் நேசரே
ஞாபகங்களில் அழியாதது
கல்விக் காலம்
ஞாபகத்தில் பூப்பது கல்வி கற்று தந்தவர்களின் கானம்
சீர்வரிசை பெற்றது போலானோம்
உங்களால் நாமும்
சிறப்பாக வாழ வேண்டும் பூக்களாய் நாளும்…
முப்பது ஆண்டின் முன் பார்த்தோம் உங்களை
முற்பகலில் கண்டது போல் வியந்தோம் இக்கணம்
கரு சுமந்த தாயைப் போல் எப்போதும் உம் மனம்
திரு அருளால் வாழ வாழ்த்துகிறோம் இத்தினம்…
நீலவேணி தேவேந்திரன்