Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் புறா | பழநிபாரதி

புறா | பழநிபாரதி

0 minutes read

உன் கவிதைகளில் ஏன்
அடிக்கடி புறாக்கள் பறக்கின்றன
என்று கேட்கிறான் நண்பன்

கவிதைகளில் மட்டுமல்ல நண்பா
என் கனவுகளிலும்
புறாக்களே வருகின்றன

நேற்றைய கனவில்
நீதிமான்கள்
நியாயவான்கள் வாழ்கிற
நீண்ட நெடிய கட்டிடத்திலிருந்து
பல்லாயிரம் புறாக்கள்
ஒவ்வொன்றாக
விழுந்து
விழுந்து
தம்மை மாய்த்துக்கொண்டன

உடைந்த இறகுகள்
மாசடைந்த காற்றில்
திசையெங்கும் சிதற
தெருமூழ்க ஓடியது
புறாக்களின் இரத்தம்

உயர்சாதிவாகனங்கள்
வழுக்காமல் விரைய
குற்றவாளிகளாக்கப்பட்ட
கைதிகளைக் கூட்டிவந்து
வீதிகளைக் கழுவிக்கொண்டிருந்தது
அதிகாரம்

அந்தப் பின்னந்தியில்
புறாக்களுக்குத்
தானியம் ஊட்டுபவர்கள்
புறாக்களோடு
படமெடுத்துக்கொண்டவர்கள்
புறாக்களை
அன்பாகவும் அமைதியாகவும்
கவனித்துக்கொண்டிருந்தவர்கள்
எல்லோரும்
கையறுநிலையில்
கலக்கமுற்றிருந்தார்கள்

இருள்மூடிய கிளையில்
இடமிழந்த புறாவொன்றின்
தீவழியும் கண்களை
இரத்தம் வழியும் விரலால்
துடைத்துக்கொண்டிருந்தது
இன்னொரு புறா

பழநிபாரதி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More