அந்தச் சந்திப்பின் நினைவுகளை
நெஞ்சத்துள் வைத்துள்ளேன்
உந்தன் நினைவுகள் சிறகு விரிக்கையில்
நூலகப்புத்தகம்
உனதும் எனதுமான இருக்கைகள்
ஆயிரம் கதைசொல்லும்
அக்கணம் முகாரியாய் ஒரு கவிதை வரைவேன்
கவிதைக்கு’ புரிந்துணர்வின்மை’ எனப் பெயர்வைப்பேன்
அந்தப் பெயரை எப்படி மறப்பேன்
உன்னை நினைக்கும் போதெல்லாம்
அந்தப் பெயர் உயிரைப் போகச் செய்வதாய் உணர்கிறேன்
என் சீவத்துடிப்பு யாவும்
பின்னிராவேளையிலே
உன்னைச் சுற்றி மிதந்தபடியிருக்கும்
ஆயிரமாயிரம் வார்த்தைகளை அடுக்கிவைத்துவிட்டு
நமது பிரிவுக்கு பொருத்தமான கவியெழுத பொருத்தம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
உன்னைப்போல்
உனது எண்ணம்போல்
உனது திமிர்போல்
உனது அறியாமைபோல்
உனது சமூகப் பயம்போல்
உனது தூரநோக்கின்மைபோல்
உனது பிழையான கற்றல் போல்
உனது பிழையான நட்புகள் போல்
உனது பிழையான ஆரூடம்போல்
தமிழில் சில நேரம் வார்த்தைகளுக்கும் வருத்தம் வந்துவிடும்போல்
அதனால்தான் உன்னைப்பற்றி
உனது எண்ணங்களைச் சுற்றி
சரியாக ஒரு கவிதை எழுதலாம் என்றால்
எந்த வார்த்தையும் என்னை தொற்றிவிடவில்லை
வார்த்தைகளுக்கும் வருத்தம் உன்னைப்போல்
ஏனெனில் நீயும் ஒரு கவிதை
தவிர
வேறென்ன பாட உன்னைப்பற்றி
உன்னால் உடையுண்ட ராகம்நான்
உன்னைப் பற்றியல்ல
எந்தப் பெண்ணையும்
முழுமையாய் பாடமுடியாது என்னால்
ஏனெனில் பெண்ணில்
பலஆயிரம் நிறமுண்டு உன்னைப்போல்
நானோ சொற்ப ராகத்தான்
ரட்சகியே
த. செல்வா