டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் நந்திதா அருண் கொரோனாதடுப்பூசி குறித்து கூறியதாவது,
தற்போது கொரோனா 2-வது அலை முடிந்து 3-வது அலை வரக்கூடிய கட்டத்தில் இன்னும் நிறைய பேர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள். மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் நோய் தொற்று வரும் என்பதால் பின் எதற்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் அதனால் வரக்கூடிய எதிர்ப்பு சக்தியால் கொரோனா நோய் தொற்று வந்தால் கூட பெரிய அளவில் ஆபத்து ஏற்படாமல் குறைந்த அளவே பாதிப்பு ஏற்படும்.
நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், ரத்த கசிவு மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் மருந்து சாப்பிடுவதை நிறுத்த வேண்டுமா?, பெண்கள் மாதவிடாய், மொனோபாஸ் காலகட்டத்தில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா? என்பது போன்ற பல சந்தேகங்கள் உள்ளது. இதுபற்றி எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் தயவு செய்து தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி போடுவதால் எந்த மருந்தையும் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கோவிஷீல்டு, கோவேக்சின் இவை இரண்டில் எந்த தடுப்பூசியை எடுத்துகொள்ளலாம், எந்த தடுப்பூசி சிறந்தது என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. இந்த இரண்டு தடுப்பூசிகளும் நல்லது, பாதுகாப்பானது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
காலம் தாழ்த்தாமல் எந்த தடுப்பூசி கிடைக்கிறதோ அதை போட்டு கொள்வது நல்லது என்றும் இதுவரை தடுப்பூசி போடவில்லை என்றால் உடனே போட்டுக்கொள்வது நல்லது என்றும் அவர் கூறினார்..