- எலும்புப்புரை நோய் என்றால் என்ன?
எலும்புப்புரை என்பது குறைந்த எலும்புத் திண்மை, எலும்புத் திசுக்களின் நுண்ணிய சிதைவு போன்றவற்றால் ஏற்படும் நோய். இந்த நோயால் எலும்புத் திண்மை குறைவும், அதன் நுண் கட்டமைப்பில் சிதைவும் ஏற்பட்டு, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும். எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்துள்ள எலும்புத் தளங்களை இந்த நோய் பாதிக்கும்.
- எலும்புப்புரை குறித்த விழிப்புணர்வு ஏன் முக்கியம்?
இது மனிதர்களைப் பலவீனப்படுத்தும் நோய்களில் முக்கியமானது. இந்த நோய் காரணமாக, முதுமையில், எலும்பு பலவீனமடைந்து எலும்பு முறியும் அபாயத்தை எதிர்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சில நேரம் இந்த எலும்பு முறிவால் இறப்புகூட நேரிடலாம். இது நாள்பட்ட நிலை என்பதால், இதற்கு நீண்ட கால சிகிச்சை தேவை. சிலருக்கு வாழ்நாள் முழுவதும் மறுவாழ்வு சிகிச்சை தேவைப்படலாம். அதனால் வாழ்க்கைத் தரம் மோசமாகப் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும். முன்கூட்டியே கவனிக்காவிட்டால் இந்த நோய்க்கான சிகிச்சை, பாதிப்புக்கு உள்ளானவர்களின் மறுவாழ்வு ஆகியவற்றுக்கான மருத்துவச் செலவு சுமையாக மாறும்.
- எலும்புப்புரை நோயின் இயல்பு என்ன?
50 வயதில், எலும்புப்புரையால் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்து பெண்களுக்கு 50 சதவீதமும் ஆண்களுக்கு 20 சதவீதமும் உள்ளது. 55 வயதுக்கு மேலான பெண்களிடமும், 65 வயதுக்கு மேலான ஆண்களிடமும் எலும்புப்புரையின் விளைவாக ஏற்படும் எலும்பு முறிவுகள் அதிகரித்துவருகின்றன.
பொதுவாக, எலும்புப்புரையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மணிக்கட்டு எலும்பு முறிவும், மாதவிடாய் நின்ற 15 முதல் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதுகெலும்பு முறிவும், 75 வயதுக்குப் பிறகு இடுப்பு எலும்பு முறிவும் ஏற்படலாம்.