இந்தோனேஷியாவில் படகு விபத்தில் சிக்கிய 15 பேர் சுமார் 6 மணி நேரம் நீந்தி ஆளில்லாத ஒரு தீவில் கரை ஒதுங்கியுள்ளனர். அங்கு குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காததால் தங்களுடைய சிறுநீரை குடித்து வந்த அவர்களை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர்.
இந்தோனேஷியாவில் பிரிட்டன், நெதர்லாந்து, ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த 15 பேர் நேற்று காலை ஒரு படகில் Lombok என்ற பகுதியில் இருந்து Komodo Islands என்ற பகுதிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் சென்ற படகு திடீரென பழுதுபட்டு கடலில் மூழ்கியது. இதனால் அதில் பயணம் செய்த 15 பேர்களும் கடலில் தத்தளித்தனர்.
ஆளுக்கொரு திசையில் கடல் அலைகளால் அடித்து செல்லப்பட்ட அவர்களில் ஆறு பேர் மட்டும் ஒரு ஆளில்லாத சின்னஞ்சிறு தீவில் கரை ஒதுங்கினர். அந்த தீவில் எரிமலை தவிர வேறு ஒன்றும் இல்லை. குடிப்பதற்கு தண்ணீரோ சாப்பிடுவதற்கு உணவு பொருளோ இல்லாததால், தங்களுடைய சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்துள்ளனர்.
இந்த படகு விபத்து குறித்து தகவல் அறிந்து அந்த வழியாக வந்தமீட்பு படையினர்கள் ஆறு பேர்களை காப்பாற்றி இந்தோனேஷியாவுக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இவர்கள் ஆறு பேர்கள் தவிர மீதி ஒன்பது பேர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.