இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு கேட்டு, ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடிதம் எழுதியதாக ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.
ஒபாமாவின் கடிதத்துக்கு பதிலளிக்கப்பட்டதாக அந்த நாட்டின் பாதுகாப்பு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலர் அலி ஷாம்கனி புதன்கிழமை கூறுகையில், “”அதிபர் ஒபாமா இதுபோன்ற கடிதத்தை அனுப்புவது இது முதல்முறை அல்ல.
ஏற்கெனவே, ஒபாமா பலமுறை கடிதங்கள் அனுப்பியுள்ளார். அதற்கு நாங்களும் பதிலளித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
1979-ஆம் ஆண்டு ஈரான் நாட்டில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சியின்போது, தலைநகர் டெஹ்ரானிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் 52 பேர் பிணைக் கைதிகளாக ஒரு ஆண்டுக்கும் மேலாக பிடித்து வைக்கப்பட்டிருந்தனர்.
அதிலிருந்து அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
எனினும், அண்மைக் காலமாக இரு நாடுகளுக்கும் இடையில் இருந்து வந்த பிணக்கம் குறைந்து வருவதையே இந்தக் கடிதப் போக்குவரத்து காட்டுவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் விரும்புவதும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தனது போரில் ஈரானின் ஆதரவைப் பெற அமெரிக்கா விரும்புவதும் இதற்கான காரணங்களில் சில எனக் கருதப்படுகிறது. ஈரான் மதத் தலைவருக்கு ஒபாமா கடிதம் எழுதியிருப்பதாக வெளியான தகவல், அமெரிக்காவில் சர்ச்சையை எழுப்பியது.