அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் உள்ள கொரில்லா கூண்டுக்குள் தவறி விழுந்த சிறுவனை மீட்பதற்காக கொரில்லாவை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.
ஒஹையோ மாகாணம், சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் ஹராம்பே என்னும், 181 கிலோ எடையுள்ள 17 வயது கொரில்லா திறந்தவெளிக் கூண்டில் அடைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கூண்டுக்குள் 4 வயதுச் சிறுவன் சனிக்கிழமை தவறி விழுந்தான். கூண்டு தடுப்புச் சுவரைச் சுற்றியுள்ள வலையில் இருந்த இடைவெளி வழியாக உள்ளே நுழைந்த பின் அந்தச் சிறுவன் கூண்டுக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த திறந்தவெளி கூண்டில் பாறைகளும் அடர்ந்த செடிகளும், சுற்றிலும் 1 அடி ஆழமுள்ள அகழியும் உள்ளது.
கூண்டுக்குள் விழுந்த சிறுவனை கொரில்லா உடனே தரதரவென்று இழுத்துச் சென்றது.
அகழி நீரில் அந்தச் சிறுவனைத் தனது கால்களுக்கு அருகில் வைத்துக் கொண்டது. சுமார் கூண்டில் பத்து நிமிடங்கள் அந்தச் சிறுவன் கொரில்லாவின் பிடியில் இருந்தான்.
இந்நிலையில் உயிரியல் பூங்கா அதிகாரிகளும் காவலர்களும் அங்கு விரைந்தனர். சிறுவனுக்கு எந்த ஆபத்தும் நேராமல் மீட்பதற்கு கொரில்லாவை சுடுவது என்ற முடிவுக்கு வந்தார் பூங்கா இயக்குநர் தேன் மேனார்டு.
உடனடியாக குறிபார்த்துச் சுடும் காவலர் ஒருவர் தனது துப்பாக்கியால் கொரில்லாவை நோக்கிச் சுட்டார்.
இதில் ஹராம்பே கொரில்லா உயிரிழந்தது. அதன் பின்னர் கூண்டுக்குள் பிரவேசித்த காவலர்கள் அந்தச் சிறுவனை மீட்டனர்.
பலத்த காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தச் சிறுவன் குறித்த எந்த விவரத்தையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
டெக்ஸாஸ் மாகாண உயிரியல் பூங்காவில் பிறந்த ஹராம்பே கொரில்லா 2015-இல் சின்சினாட்டி உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.
சிறுவனின் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது என்பதை உறுதி செய்வதற்கு, கொரில்லாவை சுட்டுக் கொல்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை என்று உயிரியல் பூங்கா இயக்குநர் கூறினார். கடந்த வாரம் சிலி நாட்டு உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் அடைக்கப்பட்ட கூண்டில் சிக்கிய நபரைக் காப்பாற்ற இரு சிங்கங்களை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.
அந்த நபர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன் சிங்கங்கள் அடைக்கப்பட்ட கூண்டில் நுழைந்தார் எனக் கூறப்படுகிறது.