தென்கொரியாவில் செனூரி கட்சி சார்பில் அதிபராக பதவி வகித்து வந்த பார்க் ஜியுன் ஹைக்கு எதிராக சமீப காலமாக ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்தது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கடந்த 6 வாரங்களாக மக்கள் சனிக் கிழமை தோறும் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வந்தனர்.
எனவே அவரை பதவியில் இருந்து நீக்க வழிசெய்யும் குற்ற விசாரணை தீர்மானத்தை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நேற்று முன்தினம் தாக்கல் செய்தன. இந்த தீர்மானம் மீது நேற்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஆளும் செனூரி கட்சியை சேர்ந்த கணிசமான உறுப்பினர்களும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். அதன்படி மொத்தமுள்ள 300 உறுப்பினர்கள் கொண்ட சபையில் 234 வாக்குகள் பெற்று தீர்மானம் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து அதிபர் பார்க் ஜியுன் ஹை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவரது அதிகாரம் அனைத்தும் பிரதமருக்கு அளிக்கப்பட்டு உள்ளது. எனினும் அதிபர் மாளிகையை பயன்படுத்த பார்க்குக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
பார்க் ஜியுன் ஹை அதிபர் பதவியில் தொடர வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் இனி அரசியல் சாசன கோர்ட்டுக்கே உண்டு. அங்கு 9 நீதிபதிகளை கொண்ட அமர்வு இதன் மீது விசாரணை நடத்தி அதிபரின் எதிர்காலத்தை உறுதி செய்யும். சுமார் 6 மாதங்கள் நடைபெறும் இந்த விசாரணையிலும் பார்க்குக்கு எதிராக தீர்ப்பு வந்தால், அவர் நிரந்தரமாக பதவியில் இருந்து நீக்கப்படுவார்.
தென்கொரியாவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அதிபர் பாராளுமன்றம் மூலம் பதவி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.