இந்தோனேசியாவை சேர்ந்த பயங்கரவாதி பஹ்ருன் நயிம் என்பவர் சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினருடன் இணைந்து சண்டையிட்டு வருகிறார். இந்தோனேசியாவில் இருக்கக்கூடிய இவரது ஆதரவாளர்கள் தலைநகர் ஜகார்த்தா மற்றும் பிரசித்திப்பெற்ற ஜாவா தீவு ஆகிய இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து.
அதன்பேரில் ஜகார்த்தாவில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் சந்தேகத்தின் பேரில் 14 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜகார்த்தா நகரின் தென்பகுதியில் உள்ள தாங்கெராங் என்ற இடத்தில் ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, நேற்று பயங்கரவாத தடுப்பு போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் போலீசாரை பார்த்ததும் அவர்களை நோக்கி கையெறி குண்டை வீசினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு வெடிக்காமல் போனது.
இதையடுத்து பயங்கரவாதிகள் போலீசாரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். உடனடியாக போலீசாரும் தங்களது துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறுதியில் 3 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுகொல்லப்பட்டனர். ஒருவர் உயிருடன் பிடிபட்டார். போலீசார் அவரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பயங்கரவாதிகள் ஆண்டு இறுதியில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியிருந்ததாகவும், அதற்கு பயன்படுத்துவதற்காக வைத்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று அவர்கள் பதுங்கியிருந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.