0
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா.சபையின் கடுமையான பொருளாதார தடையையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதித்து வருகிறது.
இந்த நிலையில் புத்தாண்டு தினத்தன்று, அந்த நாட்டின் தலைவர் கிம்ஜாங் அன் விடுத்த செய்தியில், அணுகுண்டுகளை ஏந்தி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க தொலைதூர ஏவுகணை சோதனைக்கு வடகொரியா தயார் ஆகி வருவதாக அதிரடியாக அறிவித்தார்.
அத்துடன் இந்த தொலைதூர ஏவுகணையை வடிவமைப்பதற்கான முயற்சி, இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதை அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் நிராகரித்தார். அதற்கான வாய்ப்பு இல்லை என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் இப்போது வடகொரியாவை கண்காணிப்பதற்கு அதிநவீன ரேடார் ஒன்றை அமெரிக்கா நிறுத்துகிறது.
கடலை மையப்படுத்தி நிறுத்தப்படுகிற இந்த எக்ஸ் பேண்ட் ரேடார், தொலைதூர ஏவுகணைகளை கண்டறிவதோடு, முக்கிய தகவல்களையும் அளிக்கிற ஆற்றல் வாய்ந்தது. ஏற்கனவே பல முறை இந்த ரேடார், வடகொரியாவின் அணுஏவுகணை திட்டங்களை கண்காணிக்க அமர்த்தப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.