விபசாரியின் மகனே ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் என கொட்டித்தீர்த்தர் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்-ஹுஸைன் மீது, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டேர்ட்டே, அவரை “தலையில் ஒன்றும் இல்லாதவர்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி டுட்டேர்ட்டேயின் ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்படும், போதைப்பொருளுக்கு எதிரான யுத்தத்தில், சட்டத்துக்குப் புறம்பான வகையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அது தொடர்பான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இது தொடர்பான விமர்சனத்தை முன்வைத்த, ஐ.நா விசேட அறிக்கையாளர் மீது, தனிப்பட்ட விமர்சனங்களை, ஜனாதிபதி டுட்டேர்ட்டே முன்வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து பதிலளித்த உயர்ஸ்தானிகர் அல்-ஹுஸைன், ஜனாதிபதி டுட்டேர்ட்டே -க்கு உளவியல் மதிப்பீடு தேவைப்படுகிறது எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அது தொடர்பில் கோபமடைந்துள்ள ஜனாதிபதி டுட்டேர்ட்டே, “விபசாரியின் மகனே, உயர்ஸ்தானிகரே, உளவியல் நிபுணரிடம் நான் போக வேண்டுமா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், உளவியல் நிபுணர் தன்னிடம், தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, கடுமையான சொற்களைப் பயன்படுத்த விருப்பம் கொண்டவர் என்று மாத்திரம் குறிப்பிட்டார் எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக பராக் ஒபாமா இருந்த போது, போதைப் பொருளுக்கு எதிரான யுத்தத்தை விமர்சித்தமைக்காக, அவரையும் “விபசாரியின் மகன்” என்றே, ஜனாதிபதி டுட்டேர்ட்டே குறிப்பிட்டிருந்தார்.