ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவின் வேலைத் திட்டம் தடைப்பட்டமை தொடர்பாக தன்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மறுத்துள்ளார்.
சிறிகொத்தவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “எனது யோசனையின் பிரகாரமே ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நிறுத்தப்பட்டார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வேலைத்திட்டம் தடைபட்டமைக்கு நான் தான் காரணம் என கூறுவதில் எந்தவொரு உண்மையும் இல்லை.
அதாவது அவரை வெற்றியடையச் செய்வதற்காக ஏனைய கட்சிகளின் ஆதரவினை திரட்டிக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் பிரசாரத்தினை நாமே முன்னெடுத்தோம்.
அத்துடன் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்களென ஒவ்வொருவருக்கும் முக்கிய பொறுப்புக்களை ஒதுக்கிக் கொடுத்தோம்.
அதனடிப்படையில் எனக்கு, வடக்கு- கிழக்கில் தேர்தல் பணிகளை முன்னெடுப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கமைய அப்பகுதியில் அதிக சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தோம்.
ஆனால் தெற்கு பகுதியில் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போனமையே தோல்விக்கு காரணம்.
எமது கட்சியில் சிங்கள – பௌத்த அடிப்படை இழக்கப்படுவது குறித்து நாங்கள் முதலில் அவதானம் செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் இவ்வாறான ஒன்று இடம்பெற்றிருக்கவில்லை.
இது தொடர்பாக நாங்கள் விசேடமாக தேடிப்பார்க்க வேண்டும். அதன் ஊடாக, எதிர்கால தீர்மானங்களை எடுப்பதுடன் பகுப்பாய்வும் மேற்கொள்ளப்படவேண்டும்.
தேர்தல் தோல்வி குறித்து யாரை நோக்கியும் விரல் நீட்டுவதை விடுத்து, தோல்விக்கான காரணங்களை பகுப்பாய்வு செய்து நாங்கள் முன்னோக்கிச் செல்லவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.