தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்ததாக அமுலாக்கத் துறையால் விசாரிக்கப்படும் நிறுவனத்தில், பா.ஜ.க தேர்தல் நன்கொடை பெற்றதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா நேற்று (வெள்ளிக்கிழமை) ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில், தேர்தல் நிதி பத்திர ஊழல் மூலம் தீவிரவாத தொடர்புடைய நிறுவனத்திடம் இருந்து பா.ஜ.க நன்கொடை பெற்றுள்ளது. இது தேச துரோகம் இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ருவிட்டரில், தேர்தல் நிதி பத்திர ஊழல் விவகாரம் தேச துரோக விவகாரமாகி உள்ளது. இதற்கெல்லாம் பிரதமர் மோடியும், பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவும் பதில் சொல்லியே தீர வேண்டும், என கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பா.ஜ.க தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
கடந்த 1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் நிறுவனத்திடம் அமுலாக்கத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த நிறுவனத்திடம் கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க நிதி பெற்றதாக செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.