அன்னதான கந்தன் என பெயரெடுத்த தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய திருவிழா இடம்பெற்று வரும் நிலையில், அங்கு வழங்கப்படும் அன்னதானம் சர்ச்சையாகியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆலயங்களில் அன்னதானம் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலும் அன்னதானத்தை இடைநிறுத்த பொதுச்சுகாதார பரிசோதகர்கள் முயன்றாலும், அங்குள்ள ஆதரவற்றவர்களின் நிலைமையை கருத்தில் எடுக்க வேண்டியுள்ளதால் சுகாதார பரிசோதகர்கள் திண்டாடி வருகிறார்கள்.
அன்னதான கந்தனான செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் உள்ள மடங்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனாலேயே செல்வச்சந்நிதி ஆலயம் ஆதரவற்றவர்களிற்கான திறந்தவெளி காப்பகமாக இருந்து வருகிறது. அங்குள்ள பல மடங்களில் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பித்துள்ள நிலையில், மடங்களில் வழங்கப்படும் அன்னதானத்தை நிறுத்துவதற்கு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இன்றைய தினம் மோகன் மடத்தில் அன்னதானம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தலையிட்டு அன்னதானத்தை நிறுத்தும்படி கூறினர். எனினும், ஆதரவற்றவர்களிற்காகவே தாம் அன்னதானத்தை நடத்துவதாகவும், மற்றையவர்கள் அதில் கலந்து கொள்வதை தம்மால் தடுக்க முடியாதென மட தரப்பினர் தெரிவித்தனர்.
எனினும், அன்னதானத்தை நிறுத்த வேண்டுமென சுகாதார பரிசோதகர்கள் வலியுறுத்த, அங்கு குவிந்த ஆதரவற்றவர்கள், அன்னதானத்தை நிறுத்தினால் தமக்கு உணவு ஏற்பாடு செய்யும்படி சுகாதார பரிசோதகர்களை வலியுறுத்தினர்.
பொலிசாரையும் அழைத்து அன்னதானத்தை நிறுத்த முயற்சிக்கப்பட்டபோதும், அன்னதானத்தை நிறுத்த மறுத்த மட தரப்பினர், இந்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி தெரிவித்தனர்.
இதனால் இன்றைய அன்னதான நிகழ்வில் சர்ச்சையான நிலைமை நீடித்தது.