செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மே தின நல்வாழத்துக்கள் தோழர்களே !!

மே தின நல்வாழத்துக்கள் தோழர்களே !!

2 minutes read

அனைத்து தொழிலாளர்களின் வியர்வையின் பலன் இந்த நாள்.மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் குறிக்கும் தினம். போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிபடுத்திய தினம்.
அமெரிக்காவில் 1890ஆம் ஆண்டு 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்னும் கோரிக்கையை வலியுறுத்தியும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கேட்டும் தொழிலாளர்கள் போராடினர். இதை எதிர்த்து அமெரிக்க அரசு, ஈவிரக்கம் அற்ற தாக்குதலை நடத்தியது. ஏராளமான தொழிலாளர்கள் கொல்லப்ப்ட்டனர்.

உலகத் தொழிலாளர்களின் துன்பத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து, முதலாளிகளை ஒழித்துக்கட்டி தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தால்தான் அனைத்துவிதமான துன்பங்களும் தீரும் என்றும், முதலாளிகள் உலக வரலாறின் வளர்ச்சிப் போக்கையே தடுத்து வருகின்றனர் என்றும், இதனை முடிவுக்குக் கொண்டு வரும் வல்லமை தொழிலாளர்களிடம் மட்டும்தான் உள்ளது என்றும் கூறி இதையெல்லாம் செய்வதற்கு, “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்றும் கூறினார் ஒப்பற்ற பொதுவுடைமைக் கொள்கையை உலகுக்குத் தந்த ஆசான் காரல் மார்க்ஸ். இவ்வாறு அவர் கூறி 42 ஆண்டுகள், உலகெங்கும் உள்ள தொழிலாளர்களின் இடைவிடாத போராட்டத்தால் இந்த வெற்றி நிலைநாட்டப்பட்டது.

தொழிலாளர்களின் உழைப்பினால்தான் உலகமே இயங்குகிறது. தொழிலாளர்களின் உழைப்பு இன்றி எந்தப் பொருளும் உருவாவதில்லை என்பதை உணர்ந்தனர். தாம், விலங்குகளைவிட கீழ்த்தரமாக நடத்தப்படுவதையும், உழைப்பின் பலன்களை எல்லாம் அனுபவிக்கும் முதலாளிகள், தொழிலாளர்களை வறுமையிலும் துன்பத்திலும் இருக்கும்படி செய்கின்றனர் என்பதை உணர்ந்து ஒன்றுபட்டு உரிமைக்காககப் போராடினர்.
1886ஆம் ஆண்டு அமெரிக்க தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இந்த வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பயிபுரிந்த தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்ட இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.
இவ்வாறு உலகெங்கும் நடந்த போராட்டத்தின் விளைவாக அமெரிக்காவில் இதற்கான வெற்றியை அடைந்தனர். தொழிலாளர்களின் போராட்டத்தால் நிலைகுலைந்த அரசு அவர்களின் கோரிக்கையை 1890ஆம் ஆண்டு ஏற்றது. தொழிலாளர்களின் இந்த வெற்றியை குறிக்கும் விதத்தில் மே முதல் நாள் தொழிலாளர் தினமாக மே தினம் என்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் சென்னையில்தான் முதன் முதலில் மே தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதி ம.சிங்காரவேலர் 1923ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினர்.
இந்தியாவில் முதலாளிகளின் சுரண்டலை எதிர்த்து, தங்கள் உரிமையை அடைவதற்கான போராட்டம் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. தொழிலாளர்கள் சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றை கடந்து தொழிலாளர்கள் என்னும் உணர்வுடன் ஒன்றுபட்டு போராடினால் வெற்றி கிடைத்தே தீரும் என்பதை மே தின வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.

 மே தின நல்வாழத்துக்கள்…

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.