யாழ் சர்வதேச திரைப்படவிழாவின் இறுதிக்கட்ட நிகழ்வுகளில் முதல் திரைப்படமாக ஈழத் திரைப்படமான சினம்கொள் திரையிடப்பட்ட நிலையில் படத்திற்கு மக்கள் பெருவரவேற்பு அளித்துள்ளனர்.
நேற்று முந்தினம் 21ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு யாழ் காகில்ஸ் சதுக்கத்தில் உள்ள ரீகல் சினிமாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. இதில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு திரைப்படத்தை பார்வையிட்டனர்.
படத்தை பார்த்தவர்கள், மிகுந்த நெகிழ்ச்சியோடு படக் குழுவினரை பாராட்டி உள்ளனர். திரைக்கதை, வசனம், பாடல்கள், ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்திலும் முழு நேர்த்தி காணப்பட்டுள்ளது.
இத் திரைப்படத்திற்கு மக்கள் பெரும் ஆதரவை வழங்கியிருப்பது ஈழ சினிமாவின் வெற்றிக்கான அடையாளம் என படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசபத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளதாவது,
“யாழ் சர்வதேச திரைப்பட விழாவில் சினம்கொள் திரைப்படத்தை பார்க்க அரங்கு நிறைந்த மக்கள் கூட்டத்தினர் வந்திருந்தது ஈழ சினிமா ஒரு தனித்துவ நதியாக பெருகி விட்டது என்பதை உணர்த்துகிறது. எம் சினிமா எம் மண்ணிலேயே காட்சிப்படுத்துவதைப் போல வேறு என்ன நிறைவு ஒரு கலைஞனுக்குத் தேவை? இதற்காக செய்த அத்தனை நெடிய போராட்டங்களும் முகம் கொண்ட நெருக்கடிகளும் ஒரு கணத்தில் மலைபோல நிறைவாய் மாறியது. சினம்கொள் தன் தாயகம் வந்து சேர்வதில் பங்காற்றிய யாழ் சர்வதேச திரைப்பட விழாக் குழுவுக்கும் களத்தில் பணியாற்றிய சினம்கொள் படக்குழுவுக்கும் என் நன்றி. அத்துடன் சினம்கொள் திரையிடலுக்கு ஆதரவு பெருக்கிய என் சக கலைஞர்கள், அன்பு நிறைந்த அத்தனை நண்பர்களுக்கும் பெருநன்றி. கொரோனா நெருக்கடி காரணமாக நிறைய உறவுகள் படத்தை பார்க்க முடியாத நிலை நேற்று ஏற்பட்டமை பெரும் வருத்தமே. எம் தாயக உறவுகள் அத்தனை பேரும் சினம்கொள் படத்தை பார்வையிடும் வகையில் விரைவில் நாடு முழுவதும் திரைப்படம் வெளியாக உள்ளது என்பதையும் மகிழ்ச்சியோடு அறியத் தருகிறேன்.“ எனக் கூறியுள்ளார்.
படத்தின் ஒவ்வொரு நாழியையும் தன் கலைப்பற்றாலும் மண் பற்றாலும் செதுக்கி எடுத்த இயக்குனர் ரஞ்சித் ஜோசப், உண்மையில் ஒப்பற்ற மகத்துவமான இயக்குனர் என இந்தப் படத்தில் வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ள கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் முகநூலில் எழுதிய குறிப்பு,
“’சினம்கொள்’ திரைப்படத்தை பார்க்க நேற்று அரங்கு நிறைந்த மக்கள் கூட்டத்தினர். படத்தின் ஒவ்வொரு துளி நேரத்திலும் கலந்திருந்தவர்களை பார்த்த போதே இந்த திரைப்படத்தின் வெற்றியை உணர்ந்தேன். வசனங்களுக்கு விசில் சத்தங்களாலும் கரகோசங்களாலும் இளைய தலைமுறையினர் அளித்த ஆதரவு இந்தப் படத்தின் பெரும்சாதனை. படம் பார்க்க வந்த எழுத்தாளர் அ. யேசுராசாவும் படம் குறித்து மிக நெகிழ்ந்து பாராட்டினார். எங்கள் படத்தை எங்கள் மண்ணிலேயே பார்க்கும் போது எத்தனை ஆசுவாசம்.. மகிழ்ச்சி. படத்தின் ஒவ்வொரு நாழியையும் தன் கலைப்பற்றாலும் மண் பற்றாலும் செதுக்கி எடுத்த இயக்குனர் ரஞ்சித் ஜோசப், உண்மையில் ஒப்பற்ற மகத்துவமான இயக்குனர். நேற்றைய காட்சியில் படத்தை பார்க்க முடியாது நிறைய நண்பர்கள், ரசிகர்கள் திரும்பிச் சென்றிருந்தனர். இன்னொரு மகிழ்ச்சி செய்தி. விரைவில் சினம்கொள் திரைப்படம் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.“ என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.