உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் / சிறுவர்களுக்கு உதவுவதற்காக இந்த ஆண்டு முழுவதும் தான் பங்கேற்கும் போட்டிகளில் கிடைக்கும் பரிசுத் தொகையை நன்கொடையாக வழங்கப்போவதாக ஆண்டி முர்ரே உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து 34 வயதான பிரிட்டிஷ் முன்னாள் உலக நம்பர் ஒன் டென்னிஸ் நட்சத்திரம் தனது டுவிட்டர் பக்கத்தில்,
உக்ரேனில் அதிகரித்து வரும் மோதலால் 7.5 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் ஆபத்தில் உள்ளனர், எனவே அவசர மருத்துவ பொருட்கள் மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கான கருவிகளை வழங்குவதற்கு யுனிசெப் உடன் இணைந்து பணியாற்றுகிறேன். மேலும் இந்த ஆண்டு முழுவதும் எனது பரிசுத் தொகையிலிருந்து எனது வருமானத்தை நன்கொடையாக வழங்கப் போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் இதுவரை இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை செவ்வாயன்று கூறியது.
செவ்வாயன்று முன்னதாக டென்னிஸ் நிர்வாகக் குழுக்கள் உக்ரேனில் மனிதாபிமான முயற்சிகளுக்கு உதவவும் உக்ரேனின் டென்னிஸ் கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்கவும் 700,000 அமெரிக்க டொலர்கள் (£530,000) நன்கொடை அளிப்பதாக அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.