நாட்டின் பல்வேறு பொலிஸ் பிரிவுகளிலுள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில் போலி ஏ.டி.எம். அட்டைகளை பயன்படுத்தி பண மோசடி செய்த 24 வயதுடைய இளைஞர் நுகேகொடை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
போலி ஏ.டி.எம். அட்டைகளை பயன்படுத்தி பண மோசடி மேற்கொள்ளப்படுவதாக பிலியந்தல, கொட்டாவ, தெஹிவளை, மிரிஹான மற்றும் மஹரகம உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் கிடைக்கபெற்ற சுமார் 50 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் 15 போலியான ஏ.டி.எம். அட்டைகளுடன் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மிரிஹான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 24 வயதுடைய பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சந்தேகநபர் ஏ.டி.எம். அட்டை மூலம் பணம் பெற்றுக்கொள்வதற்காக ஏ.டி.எம். இயந்திரங்களுக்கு வருகை தருபவர்களிடம் இயந்திரத்தில் இருந்து பணம் பெற்று தருவதற்கு உதவி செய்வதாக கூறி அட்டையின் இரகசிய இலக்கத்தை தெரிந்து கொண்டு அவர்களிடம் பணத்தையும், தன்னிடமுள்ள போலியான அட்டை வழங்கியுள்ளார்.
அதன் பின்னர் சந்தேக நபர் குறித்த அட்டையைப் பயன்படுத்தி வங்கிக்கணக்கிலுள்ள பணத்தை திருடியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.