இம்மாத தொடக்கத்தில் சீன இராணுவம், தைவானைச் சுற்றி மூன்று நாட்கள் பயிற்சிகளை அறிவித்தது. இதனால், இரு நாட்டு எல்லையில் பதற்றம் நீடித்தது.
மேலும், இந்த விவகாரத்தில் சீனாவின் அணுகுமுறையை அமெரிக்கா, தைவான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக விமர்சித்தன. இதற்கு சீனா தற்போது எதிவினை ஆற்றியுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை ஜிங் ஹாங் கூறும்போது, “சமீபமாகவே தைவான் ஜலசந்தி முழுவதும் ஒருதலைப்பட்சமாகவும், ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்காவும், சீனாவை குற்றம்சாட்டி சில அபத்தமான பேச்சுக்கள் எழுந்தன.
இத்தகைய கருத்துகள் சர்வதேச உறவுகள் மற்றும் வரலாற்று நீதி பற்றிய அடிப்படை பொது அறிவுக்கு எதிரானது. இதற்கான விளைவுகள் ஆபத்தானதாக இருக்கும். தைவான் விவகாரத்தில் சீனாவை விமர்சிப்பவர்கள் அதற்கான விளைவுகளை சந்திப்பார்கள்.
சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைக் குழிதோண்டிப் புதைக்கும் எந்தச் செயலுக்கும் ஒருபோதும் நாங்கள் பின்வாங்க மாட்டோம். தைவான் விவகாரத்தில் விளையாடுபவர்கள் தங்களையே எரித்துக் கொள்வார்கள்” என்றார்.