“தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி முன்கூட்டியே அறிவித்துள்ளமை தவறான முடிவாகும்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே வேட்பாளரை பெயரிட்டிருக்க வேண்டும். அதுவும் மக்கள் மன நிலையை அறிந்து, வெற்றிபெறக்கூடிய வேட்பாளரையே களமிறக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் கட்சியின் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.
எனவே, வெற்றிபெறக்கூடிய வேட்பாளரையே ஐக்கிய மக்கள் சக்தி களமிறக்க வேண்டும். ஜனாதிபதி வேட்பாளரை முன்கூட்டியே அறிவித்த கட்சியின் முடிவு தவறாகும். ஒரு வருடத்துக்கு முன்னரே அறிவிக்கப்பட்டதால் மக்களின் மனநிலை மாறக்கூடும்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலப்பகுதியில் சஜித்தான் வெற்றி வேட்பாளர் எனில் அவர் நிச்சயம் களமிறங்க வேண்டும். அப்போது நாமும் அவருக்கு ஆதரவாகச் செயற்படுவோம். மக்கள் ஆதரவு இல்லாத சூழ்நிலையிலும் சஜித் களமிறக்கப்பட்டால், நான் ஒதுங்கி நிற்பேன். தீர்க்கமான அரசியல் முடிவை எடுப்பேன்.” – என்றார்.