விளையாட்டுத்துறை அமைச்சில் கடதாசி ஆவணங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைமுறையை எதிர்வரும் காலத்தில் நிறுத்திவிட்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ வேலையை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
“விளையாட்டுத்துறை அமைச்சின் கடதாசி மூலமான ஆவணப்படுத்தல்களை 50 வீதமான குறைப்பதே எமது முதற்கட்ட நோக்கமாகும்.
மேசைக்கு மேலுள்ள கடதாசி ஆவணப்படுத்தல்களின் மீது தலையை வைத்து வேலை செய்யும் நடைமுறையை எமது அமைச்சில் இல்லாதொழிக்க வேண்டும். இதற்கான புதிய சட்டத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறோம்.
எமது அமைச்சில் தற்போது நடைமுறையின்படி குறித்தவொரு ஆவணம் நான்கைந்து இடங்களில் பரிசீலனை செய்து பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள இளைஞர் ,யுவதிகள் தொடர்ந்தும் இந்த முறைமையை விரும்புகிறார்களா என்பது கேள்வியே” என்றார்.
விளையாட்டுத்துறை அமைச்சின் ‘டங்கன் வைட்’ கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சின் செயலாளர் அநுராத விஜேகோன், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.