இலங்கைக்கு எதிராக அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டிக்கான பங்களாதேஷ் குழாத்தில் சகலதுறை வீரர் ஷக்கிப் அல் ஹசன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தனிப்பட்ட காரணங்களுக்காக தவிர்த்த ஷக்கிப் அல் ஹசன், இலங்கைக்கு எதிராக சட்டோக்ராமில் மே 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்டில் விளையாடுவார் என நம்பப்படுகின்றது.
பங்களாதேஷ் அணியின் தலைவராக தொடர்ந்தும் மொமினுல் ஹக் செயற்படவுள்ளார்.
பங்களாதேஷ் அணியில் இதுவரை இடம்பெறாமல் இருக்கும் 22 வயதான வேகப்பந்துவீச்சாளர்
ரெஜோர் ரஹ்மான் ராஜாவும் 16 வீரர்கள் கொண்ட குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வருட பிற்பகுதியில் நடைபெற்ற டெஸ்ட் தொடரே ஷக்கிப் அல் ஹசன் கடைசியாக விளையாடிய டெஸ்ட் தொடராகும்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நியூஸிலாந்து மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு எதிரான தொடர்களை அவர் தவிர்த்தார்.
தோற்பட்டையில் ஏற்பட்ட காயத்திலிருந்து பூரண குணமடையாத தஸ்கின் அஹ்மத் அணியில் இணைத்துக்கொள்ளப்படாததுடன் ஷாத்மன் இஸ்லாம், அபு ஜயேத் ஆகியோருக்கும் இடம் வழங்கப்படவில்லை.
கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆபிரிக்காவுக்கு எதிரான தொடரில் இடம்பெறாத இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஷொரிபுல் இஸ்லாம், உடற்தகுதியை நிரூபிக்கவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான குழாத்திலும் இதே வீரர்கள் பெயரிடப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாவது டெஸ்ட் போட்டிக்கான
பங்களாதேஷ் கிரிக்கெட் குழாம்
மொமினுல் ஹக் (தலைவர்), தமிம் இக்பால், மஹ்முதுல் ஹசன் ஜோய், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ, முஷ்பிக்குர் ரஹிம், ஷக்கிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், நூருள் ஹசன், யாசிர் அலி, ஈபாதொத் ஹொசெய்ன், காலித் அஹ்மத், ரெஜோர் ரஹ்மான் ராஜா, ஷொஹிதுல் இஸ்லாம், தய்ஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ்.