இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் 2022 கால்பந்தாட்ட போட்டியில் சம்பியன் பட்டத்தை உறுதி செய்வதற்கு மாத்தறை சிட்டி கழகத்திற்கு இன்னும் ஒரே ஒரு வெற்றி (3 புள்ளிகள்) தேவைப்படுகிறது.
நியூ ஸ்டார் அணிக்கு எதிராக காலி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் அணிகள் நிலையில் 31 புள்ளிகளுடன் முதலாம் இடத்திற்கு மாத்தறை சிட்டி முன்னேறியுள்ளது.
அதேவேளை, குருநாகல் மாலிகாபிட்டி மைதானத்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் போட்டியில் பெலிக்கன்ஸ் கழகத்திடம் 1 – 3 என்ற கோல்கள் அடிப்படையில் ஜாவா லேன் தோல்வி அடைந்ததால் சம்பியனாகும் அதன் எதிர்பார்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும் ஜாவா லேனின் தோல்வியை அடுத்து இந்த வருட சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் மாத்தறை சிட்டி கழகம் மாத்திரமே தோல்வி அடையாத அணியாக மிஞ்சியிருக்கிறது.
நியூ ஸ்டார் கழகத்துடனான போட்டியில் 3 புள்ளிகளை மாத்திரம் குறிவைத்து விளையாடிய மாத்தறை சிட்டி கோல்களின் எண்ணிக்கை பற்றி கவலைப்படவில்லை.
போட்டியின் 9ஆவது நிமிடத்தில் பொவாடு ப்றின்ஸ் முதல் கோலை போட்டு மாத்தறை சிட்டியை முன்னிலையில் இட்டார்.
அதனைத் தொடர்ந்து நியூ ஸ்டார் கழகம் எதிரணிக்கு கோல் போட சந்தர்ப்பம் கொடுக்கவில்லை.
எனினும் 75ஆவது நிமிடத்தில் நியூ ஸ்டார் கழகம் இழைத்த சிறு தவறைப் பயன்படுத்தி ரெஹான் வீரப்புலி கோல் போட்டு மாத்தறை சிட்டியின் கோல் எண்ணிக்கையை 2ஆக உயர்த்தினார்.
ஜாவா லேனுக்கு ஏமாற்றம்
பெலிக்கன்ஸ் கழகத்துக்கு எதிரான போட்டியில் ஜாவா லேன் கழகம் முதலில் கோல் போட்ட போதிலும் இறுதியில் ஏமாற்றமே காத்திருந்தது.
போட்டியின் 13ஆவது நிமிடத்தில் நவீன் ஜூட் பந்தை இடதுபுறமாக நகர்த்திச் சென்று அருமையான கோல் ஒன்றைப் போட்டு ஜாவா லேன் கழகத்தை முன்னிலையில் இட்டார்.
எனினும் 28ஆவது நிமிடத்தில் பிரான்சிஸ் அக்பெட்டி பரிமாறிய பந்தை பெற்றுக்கொண்ட நப்ஷான் மொஹமத், முன்னால் நகர்த்தி கோல் போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.
இடைவேளைக்கு 3 நிமிடங்கள் இருந்தபோது பெலிக்கன்ஸின் 2ஆவது கொலை லஹிரு சம்பத் போட்டார்.
இடைவேளையின் பின்னர் 66ஆவது நிமிடத்தில் நப்ஷான் மொஹமத் தனது 2ஆவது கோலை போட்டு பெலிக்கன்ஸ் கழகத்தின் வெற்றியை உறுதி செய்தார்.
வெற்றிதோல்வி இல்லை
யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற நாவாந்துறை சென். மேரிஸ் கழகத்துக்கும் அநுராதபுரம் சொலிட் கழகத்துக்கும் இடையிலான சம்பியன்ஸ் லீக் போட்டி 3 – 3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
தேசிய முன்னாள் வீரர் செபமாலைநாயகம் ஞானரூபன் 7ஆவது, 13ஆவது நிமிடங்களில் அலாதியான கோல்களைப் போட்டு சென். மேரிஸ் கழகத்தை முன்னிலையில் இட்டார்.
ஆனால், சொலிட் கழகம் 3 நிமிட இடைவெளியில் 2 கோல்களைப் போட்டு கோல் நிலையை சமப்படுத்தியது.
17ஆவது நிமிடத்தில் மதுரங்க மெண்டிஸும் 20ஆவது நிமிடத்தில் சமித் மதுரங்கவும் 3 நிமிட இடைவெளியில் கோல்களைப் போட்டனர்.
இடைவேளையின் பின்னர் 50ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் மரியதாஸ் நிதர்சன் கோல் போட்டு சென். மேரிஸ் கழகத்தை முன்னிலையில் இட்டார்.
ஆனால், 56ஆவது நிமிடத்தில் மதுரங்க தனது 2ஆவது கோலைப் போட்டு சொலிட் கழகம் சார்பாக கோல் நிலையை சமப்படுத்தினார்.
இ.போ.ச.வுக்கு ஏமாற்றம்
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற இ.போ.ச. கழகத்துக்கும் சுப்பர் சன் கழகத்துக்கும் இடையிலான சம்பியன்ஸ் லீக் போட்டி 2 – 2 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
போட்டியின் முதல் 3 நிமிடங்களுக்குள் ஷரீக் அஹமத், சிவராஜா கிரிஷாந்தன் ஆகியோர் அடுத்தடுத்து கோல்களைப் போட்டு இ.போ.ச. கழகத்தை முன்னிலையில் இட்டனர். ஆனால், 12 நிமிட இடைவெளியல் 5 கோல் போடும் வாய்ப்புகளை தவறவிட்டதால் இ.போ.ச.வுக்கு ஆட்டத்தை வெற்றிதோல்வியின்றி முடித்துக் கொள்ள நேரிட்டது.
சுப்பர் சன் சார்பாக ஹசித்த ப்ரியன்கர மிக அருமையான 2 கோல்களைப் போட்டார்.
போட்டியின் 20ஆவது நிமிடத்தில் இடதுபுறத்திலிருந்து கோணர் கிக் மூலம் நேரடி கோல் போட்ட ப்ரியன்கர, 45ஆவது நிமிடத்தில் 30 யார் ப்றீ கிக் மூலம் மற்றொரு அலாதியான கோலை போட்டார்.
இடைவெளையின் பின்னர் இரண்டு அணிகளுமே சோர்வுடன் விளையாடியதால் போட்டியில் விறுவிறுப்பு காணப்படவில்லை.