பிரெஞ்சு மகளிர் கால்பந்தாட்ட அணியின் 3 முன்னிலை நட்சத்திரங்கள் மூவர் அவ்வணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
அணித்தலைவர் வெண்டீ ரெனார்ட், கடிடியாட்டோ டியானி, மேரி கடோடோ ஆகியோர் இவ்வாறு அணியிலிருந்து விலகியுள்ளனர்.
வெண்டி ரெனார்ட் பிரான்ஸின் சிரேஷ்ட மகளிர் அணிக்காக 2011 முதல் 142 போட்டிகளில் விளையாடியவர்.
இனிமேல் தான் பிரான்ஸுக்காக விளையாடப் போவதில்லை என கடந்த வார இறுதியில் அவர் அறிவித்தார்.
2023 மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாகுவதற்கு 5 மாதங்களே உள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
‘இது கவலையானது. ஆனால், எனது மனநலத்தை பாதுகாப்பதற்கான ஒரே வழி இதுவே. இந்த சூழ்நிலையில் உலகக் கிண்ணத்தில் நான் விளையாட மாட்டேன். எனது முகம் வலியை மறைக்கலாம் ஆனால், இதயம் வேதனையடைகிறது’ என 32 வயதான வெண்டீ கூறினார்.
லியோன் கழகத்துக்காகவும் 276 போட்டிகளில் பங்குபற்றி 96 கோல்களைப் புகுத்தியவர் வெண்டீ. கழக ரீதியான போட்டிகளில் 14 பிரெஞ்சு லீக் மற்றும் 8 ஐரோப்பிய கிண்ணங்களை அவர் வென்றுள்ளார்.
வெண்டீயின் விலகல் அறிவிப்பு வெளியாகி ஒரு மணித்தியாலத்தில் கடிடியாட்டோ டியானியும் விலகுவதாக அறிவித்தார். 27 வயதான டியானி தற்போதைய பிரெஞ்சு லீக் போட்டிகளில் அதிக கோல்களைப் புகுத்தியவர்.
‘எனது அணித்தலைவரின் அறிவிப்பையடுத்து, தேசிய அணியுடனான தொடர்பை நான் துண்டித்துக் கொள்கிறேன். ஆழமான மாற்றங்கள் நடந்தால் மீண்டும் நான் வருவேன்’ என டியானி கூறினார்.
அத்துடன், 24 வயதான மேரி கடோடோவும் விலகுவதாக அறிவித்தார்.
பிரெஞ்சு மகளிர் பயிற்றுநரையோ கால்பந்தாட்ட சம்மேளனத்தையோ மேற்படி மூவரும் நேரடியாக குற்றம் சுமத்தவில்லை.
எனினும், பிரெஞ்சு மகளிர் அணியின் பயிற்றுநர் கொறீன் டியாக் 2017 இல் பதவியேற்றபின், அவருக்கும் அணியினருக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. அணித்தலைவர் பதவியிலிருந்து வெண்டீ விலகியதுடன் 4 வருடங்களின் பின் மீண்டும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, இம்மூவரின் விலகல் குறித்து இவ்வாரம் ஆராயப்படும் என பிரெஞ்சு கால்பந்தாட்டச் சம்மேளனனம் தெரிவித்துள்ளது. ‘தனிநபர்கள் எவரும் அணிக்கு மேலானவர்கள்’ அல்ல எனவும் அச்சம்மேளனம் கூறியுள்ளது.