கனேடிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவராக சார்மைன் குரூக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அச்சம்மேளனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட முதலாவது பெண்ணும் வெள்ளையினத்தவரல்லாத முதல் நபரும் சார்மைன் குரூக்ஸ் ஆவார்.
கனேடிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவராக பதவி வகித்த நிக் பொன்ட்டிஸ் கடந்த வாரம் ராஜினாமா செய்தையடுத்து இடைக்கால தலைவராக சார்மைன் குரூக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஓட்டவீராங்கனையான சார்மைன் குரூக்ஸ், 1984 ஒலிம்பிக் 4X400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். 5 தடவைகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய முதலாவது கனேடியர் இவராவார்.
ஏற்கெனவே கனேடிய கால்பந்தாட்டச் சம்மேளத்தின் உப தலைவராக சார்மைன் குரூக்ஸ் பதவி வகித்து வந்தார்.
ஆண்கள் அணி வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தமக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி கனேடிய மகளிர் அணியினர் போராட்டம் நடத்திய நிலையில், நிக் பொன்ட்டிஸ் ராஜினாமா செய்திருந்தார்.
கனேடிய மகளிர் அணி தற்போது ஒலிம்பிக் சம்பியனாக உள்ளது. தமது கோரிக்கை நிறைவேற்றப் படாவிட்டால் அமெரிக்காவில் கடந்தவாரம் நடைபெற்ற ஷீபிளீவ்ஸ் கிண்ண சுற்றுப்போட்டியை பகிஷ்கரிக்கப் போவதாக கனேடிய வீராங்கனைகள் எச்சரித்தனர்.
பின்னர், இப்போட்டிகளில் பங்கபற்றாமல் விடுவது சட்டவிரோதமானதாகும் எனவும் இது சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் பகிஷ்கரிப்பை கைவிட்டனர்.