அவுஸ்திரேலியாவில் சிறுவர் திருமணமும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைப்பதும் அதிகரிக்கி;ன்றது என அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
நியுசவுத்வேல்சிலும் விக்டோரியாவிலும் அதிகளவு காணப்படும் இந்த வகை திருமணங்களை எப்படி தடுத்து நிறுத்துவது என தெரியாமல் காவல்துறையினரும் அதிகாரிகளும் தடுமாறுகின்றனர் என தெரிவித்துள்ள ஏபிசி கடந்த வருடம் பொலிஸாருக்கு இது தொடர்பில் 80 முறைப்பாடுகள் கிடைத்தன இதில் அரைவாசிக்கும் மேற்பட்டவை 18 வயதிற்கு உட்பட்டவர்களிற்கு திருமணம் தொடர்பானது எனவும் குறிப்பிட்டுள்ளது.
பணத்திற்காக சிறுமிகள் விற்பனை செய்யப்படுகின்றனர் என இந்த விடயத்துடன் தொடர்புடைய எனி ஆர்கி என்பவர் தெரிவித்துள்ளார்.
தங்கள் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கப்படும் பதின்மவயதினருக்கு அடைக்கலம் அளிக்கும் நிலையத்தில் பணிபுரியும் அவர் பணத்திற்காக இதனை செய்கின்றனர் பணம் பரிமாறப்படுகின்றது சொத்துக்களும் வழங்கப்படுகின்றன சிறுமிகள் யுவதிகள் விற்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
சிறுவயது முதல் இதற்காக அவர்களை வளர்க்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்
கட்டாய திருமணம் என்பது அவுஸ்திரேலியாவில் 2013முதல் ஒரு குற்றம் என்ற போதிலும் இதுவரை எவரும் தண்டிக்கப்படவில்லை.
தனது உறவினருக்கு குப்ராவை திருமணம் செய்ய நிச்சயிக்கும்போது அவருக்கு 11 வயது ,சிட்னியை சேர்ந்த அந்த யுவதி இது தவறான விடயம் என தனது குடும்பத்தினருக்கு தெளிவுபடுத்த முயன்றார் ஆனால் அவர்கள் காதில் இதுவிழவில்லை.
அவரது 16 வயதில் அவர் தனது குடும்பத்தவர்களை பார்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றவேளை அவரிடம் திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளனர் இந்த திருமணம் அவரின் விருப்பம் இன்றி நிச்சயிக்கப்பட்டது.
நான் அவரை திருமணம் செய்ய மறுத்தேன் ஆனால் எனக்கு தீங்கிழைப்போம் என எனக்கு நிச்சயிக்கப்பட்டவரின் குடும்பத்தவர்கள் அச்சுறுத்தினார்கள் என்கின்றார் குப்ரா
அவர் தயக்கத்துடன் திருமணத்திற்கு இணங்கினார்,எனினும் ஊருக்கு வந்ததும் நிச்சயிக்கப்பட்டவரின் சகோதரங்களிற்கு பெரும் தொகை பணத்தை வழங்கி திருமணத்திலிருந்து விலகினார்.