பிரேசிலில் தென்கிழக்குப் பகுதியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியோரைத் மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அங்கு ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், மழை மற்றும் மண்சரிவு ஆகியவற்றுக்கு இடையிலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சாவ் போலோ நகரின் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுமார் 1,000துக்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள மீட்புப் பணிகள் மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளன.
50 வாகனங்கள், 14 ஹெலிகொப்டர்கள் மற்றும் 53 பொறியியல் குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் 38 பேரைக் காணவில்லை என்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 70ஐ எட்டக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து இதுவரை 1,730க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், 760 பேர் வீடுகளை இழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.