தென் கொரியாவுக்கு சீனாவிலிருந்து வரும் பயணிகள் அடுத்த மாதம் முதல் கொவிட்-19 பரிசோதனை செய்யத் தேவையில்லை. இருப்பினும், அவர்கள் புறப்படுவதற்கு முன்னர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என தென் கொரிய அதிகாரி ஒருவர், இன்று (22) தெரிவித்தார்.
முன்னதாக, சீனாவிலிருந்து வரும் பயணிகள், தென் கொரியாவுக்கு வருவதற்கு முன்னரும் வந்த பின்னரும் கொவிட் 19 சோதனைக்கு உட்பட வேண்டும் என தென்கொரியா அறிவித்து இருந்தது.
எனினும், ஏனைய நாடுகளில் அண்மைக் காலமாக முன்னெடுக்கப்பட்டுள்ள கொவிட்19 தளர்வுகளை மேற்கோள்காட்டி, தென்கொரியா இந்த தளர்வு நடவடிக்கையை அறிவித்துள்ளது.
“சீனாவிலிருந்து வரும் நபர்களிடையே நேர்மறை விகிதம் ஜனவரி முதல் வாரத்தில் 18.4% இலிருந்து பெப்ரவரி மூன்றாவது வாரத்தில் 0.6% ஆகக் குறைந்துள்ளதால், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் கூடுதல் தளர்வு சாத்தியமாகின்றது” என்று தென்கொரியாவின் உள்துறை துணை அமைச்சர் கிம் சுங்-ஹோ தெரிவித்தார்.
மார்ச் 1 முதல், தென் கொரியா சீனாவிலிருந்து வரும் விமானங்களை இன்சியான் சர்வதேச விமான நிலையத்தைத் தவிர மற்ற விமான நிலையங்களில் தரையிறங்க அனுமதிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சீனாவில் இருந்து புறப்படும் முன் கட்டாய PCR சோதனைகள், மார்ச் 10 வரை நடைமுறையில் இருக்கும் என்று கிம் தெரிவித்தார்.