மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினருக்கான மன்னிப்புத் திட்டத்தின் கீழ், சொந்த நாட்டிற்கு திரும்ப 195,471 வெளிநாட்டினர் பதிவு செய்திருக்கின்றனர்.
இதில் 165,040 பேர் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், மீதமுள்ள 30,431 பேர் நாடு திரும்ப காத்திருப்பதாக மலேசிய குடியேற்றத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்த சட்டவிரோத குடியேறிகளில் பெரும்பாலானோர் இந்தோனேசியா, வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்,” எனக் கூறியிருக்கிறார் குடியேற்றத்துறை இயக்குனர் ஜெனரல் கைரூல் தவுத்.
சட்டவிரோதமாக மலேசியாவில் பணியாற்றும் வெளிநாட்டினரை வெளியேற அறிவுறுத்தும் ‘Back for good’ என்ற திட்டத்தின் மூலம் இவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மலேசியாவிலிருந்து வெளியேறுபவர்கள் 700 மலேசிய ரிங்கட்டை (இந்திய மதிப்பில் சுமார் 11 ஆயிரம், இலங்கை மதிப்பில் 28 ஆயிரம்) அபராதமாக செலுத்த வேண்டும். கடந்த ஆகஸ்ட் 1 அன்று நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட இத்திட்டம் டிசம்பர் 31யுடன் முடிவுற்ற நிலையில், சட்டவிரோதமாக தங்கியுள்ள குடியேறிகளை கண்டறியும் விதமாக மலேசிய குடியேற்றத்துறை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.