சீனாவில் கொரோனா வைரஸ் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக சீனாவும், சீனாவின் பிரபல மருத்துவ கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களும் மேற்கத்தேய நாடுகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸை விரைவாக கண்டறியும் கருவிகள் மற்றும் தரமான முகக் கவசங்கள் தங்களிடம் விற்பனைக்குள்ளதாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, கொரோனா வைரசை கண்டறியும் பரிசோதனை கருவிகளையும், முகக் கவசங்களையும் பல லட்சக்கணக்கில் UK , ஸ்பெயின், செக் குடியரசு, சுலோவாக்கியா உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் சீனாவிடமிருந்து வாங்கியது.
ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையின் அவசர தேவையாக 6லட்சத்து 40 ஆயிரம் பரிசோதனைக் கருவிகளை வாங்க ஓர்டர் செய்தது. தற்போது இந்த கருவிகள் அனைத்துமே தரமற்றவை என இறக்குமதி செய்த நாடுகள் தெரிவித்துள்ளன.
ஸ்பெயின் சுகாதாரத் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்:-
சீனாவின் பிரபல பயோ டெக்னொலொஜி நிறுவனமொன்றிடம் இருந்து முதல் கட்டமாக பெறப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகள் 30 சதவீதமே முடிவைத் தந்தன. ஆனால் 80% வரை துல்லிய முடிவுகள் கிடைத்தால் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த இயலும்” என்று தெரிவித்துள்ளனர்.
செக் குடியரசு வைத்திய அதிகாரிகள் பேசும்போது:-
தினமும் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்கிறோம். என்றாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5 நாட்கள் ஆனவர்களையே இதில் கண்டறிய முடிகிறது என்றார்.
சுலோவாக்கியா பிரதமர் இகோர் மோடோவிச்:-
உள்ளூர் இடைத்தரகர் ஒருவர் மூலம் சீனாவிலிருந்து 12 லட்சம் பரிசோதனை கருவிகளை வாங்கினோம். ஒன்றிலுமே உருப்படியான முடிவு கிடைக்கவில்லை. இவற்றையெல்லாம் கொண்டுபோய் ஆற்றில்தான் வீசவேண்டும்” என்று ஆவேசப்பட்டார்.
இங்கிலாந்து பொது சுகாதார பிரிவு உயரதிகாரி ரொபர்ட் பெஸ்டோன்:-
சீனா கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை கருவிகளின் முடிவுகள் முற்றிலும் தெளிவற்று காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
‘ஐரோப்பிய நாடுகளின் எளிய இறக்குமதி கொள்கைகளை பயன்படுத்தி, கிடைத்த சந்தர்ப்பத்தை வைத்து மருத்துவ கருவிகள் தயாரிக்கும் சீன நிறுவனங்கள் பெருமளவில் விளையாடி விட்டன’ என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
ஆனால் தங்கள் நாட்டு மருத்துவ கருவிகள் பற்றி ஐரோப்பிய நாடுகள் குற்றஞ் சாட்டுவதை சீனா மறுத்துள்ளது.
இதுபற்றி சுலோவாக்கியா நாட்டிற்கான சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்:-
சுலோவாக்கியாவில் சீன நிறுவனங்களின் பரிசோதனைக் கருவிகளை யாருக்கும் சரியாக கையாளத் தெரியவில்லை. எனவேதான் அவர்களுக்கு துல்லிய முடிவுகள் கிடைக்கவில்லை” என்று மறுத்தார்.
“ஏற்றுமதி கொள்கையில் நாங்கள் ஒருபோதும் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுவதில்லை” எனவும் சீனா அரசாங்கம் கூறுகிறது.
அதேநேரம், ‘இனிமேல் தங்கள் நாட்டு மருத்துவ நிறுவனங்கள் மருத்துவ கருவிகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக தக்க தகுதிச் சான்றிதழ்களை பெறவேண்டும்’ என்ற புதிய உத்தரவை சீன அரசாங்கம் பிறப்பித்துள்ளது.
-வணக்கம் இலண்டனுக்காக ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-