கடந்த ஆண்டு ஆசிய நிதி மையத்தில் பீஜிங் ஒரு தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதித்த பின்னர், பிரிட்டிஷ் குடிமக்களாக மாறுவதற்கான வாய்ப்பை வழங்கும் புதிய விசாவிற்கு ஹாங்காங் குடியிருப்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் விண்ணப்பிக்கும் வாய்ப்பினை இங்கிலாந்து வழங்கியுள்ளது.
ஜனவரி 31, ஞாயிற்றுக்கிழமை முதல் பிரிட்டிஷ் தேசிய வெளிநாட்டு (பி.என்.ஓ) கடவுச்சீட்டை செல்லுபடியாகும் பயண ஆவணமாக அங்கீகரிக்க மாட்டோம் என்று சீனாவும் ஹாங்காங்கும் கூறியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், வரலாறு மற்றும் ஹாங்காங் மக்களுடனான நட்பின் ஆழமான உறவுகளை நாங்கள் கெளரவித்துள்ளோம், சுதந்திரம் மற்றும் சுயாட்சிக்கு நாங்கள் துணை நிற்போம் என்று கூறியுள்ளார்.
புதிய விசா 300,000 க்கும் அதிகமான மக்களையும் அவர்கள் சார்ந்தவர்களையும் பிரிட்டனுக்கு ஈர்க்கக்கூடும் என்று இங்கிலாந்து அரசு கணித்துள்ளது.
கடந்த ஆண்டு முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், பி.என்.ஓ அந்தஸ்துள்ளவர்கள் பிரிட்டனில் ஐந்து ஆண்டுகள் வாழவும், படிக்கவும், வேலை செய்யவும், இறுதியில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவும் அனுமதிக்கிறது.
பி.என்.ஓ என்பது 1987 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு அந்தஸ்தாகும், இது குறிப்பாக ஹாங்காங்குடன் தொடர்புடையது.