எதிர்வரும் சில வருடங்களுக்குள் வடக்கில் உள்ள பாடசாலைகளுக்குத் தேவையான அனைத்து ஆசிரியர்களையும் இணைத்துக் கொண்டு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றும் எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்த பிரதமர், இது குறித்து வட மாகாண ஆளுநரிடமும் இராணுவத் தளபதியிடமும் தான் விசாரித்ததாகவும் அப்படியான ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் கூறியதாகவும் பிரதமர் கூறினார்.
வட மாகாணத்தில் நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றும் 457 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.
இதன்போது, வட மாகாணத்தில் கல்வியை முன்னேற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும். எதிர்வரும் சில வருடங்களுக்குள் வடக்கிலுள்ள பாடசாலைகளுக்குத் தேவையான அனைத்து ஆசிரியர்களையும் இணைத்துக் கொண்டு பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
வட மாகாணத்தில் இராணுவ முகாம்கள் அகற்றப்படும் என வெளியாகியுள்ள அடிப்படையற்ற பிரச்சாரங்கள் குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர், சில பத்திரிகைகள் இவ்வாறான தவறான பிரச்சாரங்களை முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டார். மக்களுக்கு உண்மையான செய்திகளை வழங்க அவர்கள் முன்வர வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் உரையாற்றுகையில், ஆசிரியர் நியமனங்கள் மற்றும் கல்வி தொடர்பான நடைமுறைகள் யாவும் மாகாண சபை அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.
மாகாண சபைகளுக்கான சட்டத்தில் கல்வி என்பது மாகாண சபைகளுக்கு பகிரப்பட்ட விடயம். இந்த நிலையில் ஆசிரியர் நியமனங்கள் மற்றும் கல்வி தொடர்பான நடைமுறைகள் யாவும் மாகாணசபையின் அதிகாரத்தின் கீழ்க் கொண்டுவரப்பட வேண்டும். தற்போது பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான அதிகாரம் மாத்திரமே மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய வகைகளை சேர்ந்த க.பொ.த உயர்தரத்தில் தகைமை பெற்றவர்கள், டிப்ளோமா பட்டம் பெற்றவர்கள் போன்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்கக்கூடிய அதிகாரம் மாகாணசபைக்கு வழங்கப்பட வேண்டும்.
வட மாகாணத்தில் செயற்படும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் மற்றும் தேசிய கல்வியியல் கல்லூரிகள் என்பனவற்றிற்குப் பயிற்சி ஆசிரியர்களை வட மாகாணத்தின் தேவைக்கேற்ப தெரிவு செய்யும் அதிகாரம் எமது மாகாண சபைக்கு இல்லை என்று தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)