கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சில கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் நிலவும் மஞ்சளுக்கான தட்டுப்பாடு நிவர்த்திக்கப்படும் என விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சுப ஹீன்கெந்த குறிப்பிட்டார்.
ஜனவரி 21 ஆம் திகதி வரை மஞ்சள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.எனினும், இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்கள் ஜனவரி 21 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டை வந்தடைந்தமையால் அவற்றை துறைமுகத்திலிருந்து விடுவிக்காதிருந்ததாகவும் சுப ஹீன்கெந்த தெரிவித்தார்.
இதேவேளை, நேற்று முதல் அமுலாகும் வகையில் மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, 1 கிலோகிராம் மஞ்சள் தூளுக்கான அதிகபட்ச சில்லறை விலை 750 ரூபா என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.இதற்கான வர்த்தமானியும் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் வௌியிடப்பட்டுள்ளது.