பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் தொடர்பாக ஆராய்வதற்காக சுயாதீனக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு கூட்டம் திருகோணமலையில் உள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வீட்டில் நடைபெற்றது.
இந்த நிலையில், குறித்த கூட்டம் தொடர்பாக கருத்து வெளியிடும்போதே, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இந்த தகவலை வெளியிட்டார்.
தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு கூட்டம் சுமூகமாக இடம்பெற்றது என்றும் தேர்தலில் ஏற்பட்ட வாக்குச் சரிவு உள்ளிட்ட பின்னடைவுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் தமக்குள் கலந்துரையாடுவதைவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியே சுயாதீன ஆய்வுக்குழுவொன்றை நியமித்து தேர்தல் பின்னடைவுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்டதாக தெரிவித்த சுமந்திரன், அதனை அரசியல் குழு ஏற்றுக்கொண்டதோடு, அதற்குரிய நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி மீண்டும் வவுனியாவில் நடைபெறவுள்ளது என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.