கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2000 சிறிய சிகிச்சை நிலையங்களை (Mini Clinic) ஏற்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
ஆலோசனை முடிவில் கருத்து வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா படிப்படியாக குறைந்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் என தெரிவித்தார்.
பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது என்றும் ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் சிறிய சிகிச்சை நிலையங்களை (Mini Clinic) க் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மருத்துவர்கள், செவிலியர், மருத்துவ உதவியாளர் ஆகியோர் மினி கிளீனிக்கில் இடம் பெறுவர் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத பகுதிகளில் மினி கிளீனிக் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் 40 சதவீத மக்கள் முக கவசம் அணிவது இல்லை என்றும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.