பல்வேறுப்பட்டபொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மக்களுக்கு வங்கி கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை பின்பற்றவேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடன்களை மீள் செலுத்த முடியாதவர்களையும், புதிதாக கடன் பெற தீர்மானித்துள்ளவர்களையும் வங்கிக்குள் அநாவசியமான முறையில் நெருக்கடிக்குள்ளாக்க வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரச வங்கி பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
நிதியமைச்சின் கொள்கை மறுசீரமைப்பு கூட்டம் இன்று நிதியமைச்சில் இடம்பெற்றது. இதன்போது அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சரான நிதியமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடனை மீளச் செலுத்துவதற்கு முடியாத மற்றும் புதிதாக கடன் பெறுவதற்கு வரும் பொதுமக்களை வங்கி நடவடிக்கைகளின் போது தேவையற்ற சிரமத்திற்கு உட்படுத்த வேண்டாம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் (CRIB) தரவுகளை சரிபார்க்கும் செயற்பாட்டின் போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இதன்போது கவனத்திற்கு கொண்டு வந்தார்.
கடன் பெற்று ஒருவர் அதனை மீள செலுத்த தவறும் பட்சத்தில், அவருக்கு உத்தரவாதம் வழங்கும் நபரின் பெயர் இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் தரவுகளில் உள்ளடக்கப்படுவதால் குறித்த நபர் கடனொன்றை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவராக விளங்குகின்றமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர், அதற்கு உரிய நிவாரண நடைமுறைகளை பின்பற்றுமாறு கூறினார்.
கடந்த அரசாங்கத்தில் சமுர்த்தி கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளின்போது குறிப்பிடத்தக்க தரப்பினரை விசேடமாக கருத்தி கொண்டு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆராய்ந்து அரசியல் பாகுபாடின்றி குறைந்த வருமானம் பெறும் அனைத்து குடும்பங்களுக்கும் சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.0Shares