மன்னாரில் எதிர்வரும் 26 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றை மேற்கொள்ள இருப்பதாக கூறி மன்னார் பொலிஸார் தடை உத்தரவை பிறப்பிக்க கோரி மன்னார் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை வழக்குத் தாக்கல் செய்தனர்.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன் என்பவரே குறித்த நினைவேந்தலை மேற்கொள்ள உள்ளதாக கூறி வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் சிவகரன் என்பவரை நேற்று மதியம் 1.30 மணி அளவில் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சிவகரன் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.சிராய்வா மற்றும் சட்டத்தரணி அன்ரனி றொமோசன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
இதன் போது பொலிஸாரின் வேண்டுகையை ஏற்க மறுத்த நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறியதுடன் எதிர் வரும் முதலாம் திகதி வரை வழக்கை ஒத்தி வைத்தார்.