மாகாணசபைத் தேர்தல்களை இலக்குவைத்து ஒதுக்கப்பட்டுள்ள நிதி உள்ளடங்கலாக அநாவசிய செலவுகளைக் குறைத்து, அதனைப் பயன்படுத்தி அதிபர், ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உபதலைவர் கயந்த கருணாதிலக வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உலகின் ஏனைய நாடுகள் கல்வித்துறைக்கான முதலீட்டிற்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றபோதிலும், தற்போதைய அரசாங்கம் நடைபாதைகள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தேர்தலை இலக்காகக்கொண்ட நடவடிக்கைகளில் முதலீடு செய்வதையே மிகவும் முக்கியமானதாகக் கருதுகின்றது.
எனவே மாகாணசபைத் தேர்தல்களை இலக்குவைத்து ஒதுக்கப்பட்டுள்ள நிதி உள்ளடங்கலாக அநாவசிய செலவுகளைக் குறைத்து, அதனைப் பயன்படுத்தி அதிபர், ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்கி, எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகளுக்கு வருகைதரும் ஆசிரியர்கள் மனநிறைவுடன் பணியாற்றுவதற்கான சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் இதன்போது கூறினார்.