நாட்டு நிலைமை சீராகும் வரை பாராளுமன்றத்துக்கு வருகை தராமல் இருக்க முடிவு செய்துள்ளதாக பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை முன்வைத்த அவர் இன்றுள்ள பிரச்சினைகள் தீரும் வரை பாராளுமன்றத்துக்கு சமுகமளிக்காதிருக்க முடிவு செய்துள்ளேன். எனக்கு பிரதமராக தேவையில்லை. நாட்டை கட்டியெழுப்பவே அனைவரும் இங்கு வந்துள்ளனர். ஒரு எம்.பி பதவியுடன் முன்னாள் பிரதமர் கூட நாட்டை கட்டியெழுப்ப வந்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் பாராளுமன்றம் வந்தது ஏன்? அனைவருக்கும் நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்புள்ளது. 2015 தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்றார். ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான மக்கள் அவரின் தங்கல்ல வீட்டுக்கு வந்தனர். வென்ற மைத்திரிபாலவின் பொலன்னறுவை வீட்டுக்கு யாரும் செல்லவில்லை.
அன்று மக்கள் ஒருவாறு நடந்ததோடு இன்று வேறு விதமாக நடக்கின்றனர். தமிழ், சிங்கள புத்தாண்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் மக்களின் செயற்பாடு குறித்து உணர வேண்டும். இன்று கால்டன் வீட்டை மக்கள் சுற்றிவளைக்கின்றனர்.