இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் , அத்தியாவசிய சேவைகள் அவற்றில் உள்ளடக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையானளவு எரிபொருளை மட்டுப்பாடின்றி விநியோகிக்குமாறு எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதே வேளை விவசாய நடவடிக்கைகளுக்காகவும் வரையரையின்றி எரிபொருளை விநியோகிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி முதல் மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டிகள், கார், வேன் மற்றும் ஜூப் உள்ளிட்ட வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டது.
எனினும் பஸ் மற்றும் ஏனைய வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்கள் இந்த வரையறைக்குள் உள்ளடக்கப்படவில்லை.
அத்தோடு பெரியளவிலான பீப்பாய்கள், கலன்கள் உள்ளிட்டவற்றில் எரிபொருளை வழங்கும் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதோடு , எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.