அரசாங்கத்தை பதவி விலகுமாறு மக்கள் கோரி வருகின்றனர். ஆனால் அரசாங்கமோ செவிடன் காதில் ஊதிய சங்கு பேன்று செயற்படுகின்றது.
அதனால் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
கம்பஹா பிரதேசத்தில் அமைந்திருக்கும் கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தை பதவி விலகுமாறு தெரிவித்து நாடுபூராகவும் மக்கள் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
என்றாலும் அரசாங்கம் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று எதுவும் தெரியாது போல் இருந்து வருகின்றது.
அதேநேரம் போராட்டங்களை அடக்குவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.
பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த, பொலிஸார் வீதித்தடைகளை ஏற்படுத்தியதுடன் அந்த வீதித்தடைகளில் கறுப்பு பொலித்தீன் உறைகளால் மறைக்கப்பட்ட இரும்பு கூர்களும் பொருத்தப்பட்டிருந்தன.
இது மிகவும் பயங்கரமான செயலாகும். ஆர்ப்பாட்டக்காரர்களின் கண்களில் அது குத்தினால், காலா காலமாக குருடராக இருந்திருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும்.
அத்துடன் அரசாங்கத்துக்கு எதிராக போராடும் மக்களை அடக்குவதற்கு அரசாங்கம் கடைப்பிடிக்கும் நடவடிக்கையானது விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட செய்யமாட்டார்.
அந்தளவு மோசமான முறையில் மக்களை அடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அரசாங்கம் எவவாறான அடக்குமுறைகளை கையாண்டாலும் நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை.
மேலும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று கிராமங்களில் இடம்பெறும் மரண வீடொன்றுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இவ்வாறான நிலையில் நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல முடியாது. பொருட்களின் விலை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகரித்து செல்கின்றது.
அதனால் இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கும் ஐக்கிய பாதயாத்திரை இன்று கண்டியில் ஆரம்பிக்கப்படுகின்றது.
கொழும்பு நோக்கி பயணிக்கும் இந்த பாதயாத்திரையில் கட்சி பேதங்களை மறந்து அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன் நாடுபூராகவும் மக்கள் இந்த அரசாங்கத்தை பதவி விலகுமாறு தெரிவித்து வருகின்றபோதும் அரசாங்கம் அதுதொடர்பில் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றது.
அதனால் மக்களின் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையில் இந்த அரசாங்கத்தை அதிகாரத்தில் இருந்து வீழ்த்துவதற்கு, நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.
நம்பிக்கையில்லா பிரேரணையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் தற்போது கைச்சாத்திட்டு வருகின்றனர்.
அரசாங்கத்தில் இருந்து எதிர்க்கட்சிக்கு வந்திருக்கும் 11கட்சிகளின் குழு, உண்மையாகவே அரசாங்கத்தை எதிர்ப்பதாக இருந்தால், நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட முன்வரவேண்டும் என்றார்.