நோயாளிகளுக்கு அவசியமாக தேவைப்படுகின்ற மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் , வலி நிவாரணிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான மருந்துகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பிரதான செயலாளர் எஸ்.பீ. மெதிவத்த ‘வீரகேசரி’க்குத் தெரிவித்தார்.
சத்திர சிகிச்சைகளின்போது நோயாளிகளுக்கு அவசியமாக தேவைப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கூட வெளியிலிருந்தே அவர்கள் கொண்டுவருகின்ற சூழ்நிலை காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
மருந்துகள் இல்லாமல் நோயாளிகள் கஷ்டப்படுவது போலவே சுகாதரப் பிரிவினரும் தங்களது கடமைகளையும் சேவைகளையும் செய்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.
சத்திர சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகள் முற்றிலுமாக வைத்தியசாலைகளில் இல்லை. இவற்றை, நோயாளிகள் வெளியிலிருந்து கொண்டுவர வேண்டும். அவற்றை அவர்கள் கொள்வனவு செய்வதாயின், 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபா வரை செலவிட வேண்டியுள்ளது.
நீரிழிவு பரிசோதனைக்கான உபகரணங்கள, வலி நிவாரண மருந்துகள் மற்றும் இன்சுலின்கள், சேலைன் உபகரணங்களும் அவற்றுள் செலுத்தப்படும் திரவ மருந்து வகைகள் போன்றவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதற்கு மேலதிகமாக, பெண்டேஜ், பஞ்சுகள், ஆகியனவும் தட்டுப்பாடு காணப்படுகிறது.
நோயாளிகளை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளும் தற்போது நடத்தப்படுது இல்லை.
இவ்வாறான பல்வேறு அசெளகரியங்களுக்கு மத்தியில் சேவை செய்யும் எங்களுக்கு போக்குவரத்து வசதிகள் இல்லை. அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவை சமாளிக்க எமக்கான சம்பளம் போதுமானதாக இல்லை. எமக்கு 2016 ஆம் ஆண்டிலேயே கடைசியாக சம்பளம் அதிகரிக்கப்பட்டது. எங்களுக்கான சம்பளத்தையும் அதிகரிக்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு , நோயாளிகளுக்கான போதியளவு போஷாக்கான உணவு இன்மை, சுகாதார சேவைப் பிரிவினரின் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சுகாதார சேவை தொழிற்சங்க ஒன்றியத்தினரால் கொழும்பு, களுபோவில உள்ளிட்ட 8 பிரதான வைத்தியசாலைகளில் நேற்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.